திமுக தலைவராக 1969 ஆம் ஆண்டு முதல் தான் மறையும் வரை இருந்து திமுகவை பல்வேறு இக்கட்டான காலக்கட்டங்களில் வழிநடத்தி கட்சியை கட்டுக்கோப்பாக வைத்து ஆட்சியையும் பிடித்தவர் கருணாநிதி. அவரது மகன் முதல்வராகவும் கட்சித்தலைவராகவும் உள்ள நிலையில் அவரது ஐந்தாம் ஆண்டு நினைவு நாளில் அவரை பெரிய அளவில் நினைவு கூறாதது கட்சியினர் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பெரியாரின் வார்த்தைகளில் கண்ணீர் துளிகள் என்று கிண்டலடிக்கப்பட்டவர்கள் அண்ணா தலைமையில் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த இயக்கம் திமுக. ஆரம்பத்தில் கட்சியின் 11 முக்கிய தலைவர்களில் கருணாநிதி இல்லை. கட்சியின் ஐம்பெரும் தலைவர்களில் கருணாநிதி இல்லை. எம்ஜிஆரும் இல்லை. ஆனால் அதன் பின்னர் 75 ஆண்டுகளாக இவர்கள் இருவர் மட்டுமே தமிழகத்தின் திமுக, அதிமுகவாக மாறி மாறி ஆட்சி செய்யும் கட்சியின் அடையாளங்களாக மாறிப்போனார்கள்.
அதிலும் திமுக தலைவராக அண்ணா மறைவுக்குப்பின் பொறுப்பேற்று தான் மறையும் வரை அதே பொறுப்பில் இருந்து தோல்வியே காணாத சட்டமன்ற உறுப்பினர், ஐந்து முறைக்கு மேல் முதல்வர் என பல பன்முக தன்மைக்கு சொந்தக்காரர் கருணாநிதி. அவர் வந்தப்பாதை சாதாரணமானது அல்ல. அவரது எழுத்திலேயே சொல்வதாக இருந்தால் அவரது பாதை மலர் பாதை அல்ல முள்ளும் கற்களும் நிறைந்த பாதை. அதைக்கடந்து தான் பல தலைவர்களை வீழ்த்தி அப்பதவிக்கு அவர் வந்தார்.
எம்ஜிஆரின் வெளியேற்றம் கட்சியை வெகுவாக பாதித்தபோதும், 13 ஆண்டுகள் கட்சி தொடர் தோல்வியை சந்தித்தபோதும் தானும் தளராமல் கட்சியையும் தளர்ச்சியடையாமல் கட்டி காத்த பெருமை கருணாநிதியையே சாரும். கருணாநிதி தனது பாதையை தானே செதுக்கியவர். திருவாரூரில் திருக்குவளை எனும் சிற்றூரிலிருந்து வந்த ஒரு இளைஞன் சினிமாவில் கால் பதித்து அரசியலில் கால் பதித்து அண்ணாவிற்கு பின் முதல்வராக பொறுப்பேற்றபோது அவரது வயது 44 மட்டுமே.
ஆனால் அவரளவிற்கு யாரும் திமுகவில் சோபிக்க முடியவில்லை. கலைஞரின் நிழலில் வளர்ந்தவர் ஸ்டாலின் அவர் கட்சிக்குள் 1968-ல் வந்தாலும் 1984 ஆம் ஆண்டே அவரை தேர்தலில் நிறுத்தினார் கலைஞர். 1989 ஆம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தாலும் ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. 1996 ஆம் ஆண்டு அவரை முதன்முதலில் மேயராக்கினார். அப்போது ஸ்டாலினுக்கு வயது 43. ஆனாலும் கட்சிக்குள் அவரைவிட வளர்ச்சியில் பெரிய அளவில் இருந்த வைகோவை 1993 ஆம் ஆண்டு நகர்த்தியது கருணாநிதியின் ராஜதந்திரம்.
இப்படி திமுகவை நித்தம் நித்தம் செதுக்கி அதன் வளர்ச்சியினூடே தானும் வளர்ந்து தனது குடும்பத்தையும் இணைக்க வேண்டிய இடத்தில் இணைத்து ஸ்டாலின் தவிர வேறு ஒருவர் திமுகவுக்குள் இல்லை என்கிற நிலைக்கு நகர்த்திவிட்டு மறைந்தார் கலைஞர். அவரது மறைவுக்குப்பின் எளிதாக தலைவரானார் ஸ்டாலின். இப்படி பதவிக்கு வந்த ஸ்டாலின் அடுத்து மக்களவை தேர்தல், சட்டமன்ற தேர்தலில் தந்தை காட்டிய வழியில் கூட்டணி அமைத்து முதல்வரும் ஆனார். தான் கலைஞரின் மகன் என்பதை அடிக்கடி மேடையில் சொல்லும் ஸ்டாலின் பதவி ஏற்கும்போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று சொன்னது அனைவராலும் நெகிழ்ச்சியாக பார்க்கப்பட்டது.
2018 கருணாநிதி மறைவுக்குப்பின் 2021 ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் ஆட்சி 2 ஆண்டுகளை கடந்து 2023 லும் தொடர்கிறது. கட்சிக்குள் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆதிக்கம் தொடர்கிறது. தன்னை வளர்த்து ஆளாக்கிய தனது தந்தையைப்பற்றி அடிக்கடி நினைவுக்கூர்ந்தாலும் தந்தையின் வழியில் ஆட்சியையோ, கட்சியையோ நடத்துவதில்லை என்கிற விமர்சனம் கட்சிக்குள்ளும் வெளியிலும் ஸ்டாலின் மீது உண்டு.
தனது ஆட்சியில் அதிகாரிகள் எந்த இடத்தில் கருணாநிதி வைத்திருப்பார், அவரது கண்காணிப்பின் கீழ் யாரும் தப்ப முடியாது அதே போல் கட்சியையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாலும் ஒரு தந்தையைபோல் அவரது அணுகுமுறை காரணமாக கட்சியினர் விசுவாசம் எப்போதும் இருக்கும். கட்சி தலைவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும். கட்சி அலுவலகத்தை எப்போதும் தான் வந்துபோகும் ஒரு பாசறையாகவே அவர் பாவித்து வந்தார். ஆனால் ஸ்டாலின் கட்சி அலுவலகத்துக்கே வருவதில்லை, வருவது ஏதாவது ஒரு முக்கிய நிகழ்ச்சிக்காக மட்டும்.
இவர்தான் வருவதில்லை என்று பார்த்தால் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, மற்ற நிர்வாகிகளும் வருவதில்லை என்கிறார்கள். கட்சிக்காரர்களை சந்திக்கும் முக்கிய நிகழ்வான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக்கூட காணொளிகாட்சி வாயிலாக நடத்துகிறார் இதனால் கட்சி நிர்வாகிகளுக்கும் தலைவருக்கும் இடையேயான இடைவெளி அதிகரிக்கிறது, திமுகவினரிடையே பழைய விசுவாசம் குறைந்து வருகிறது என்கிற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. வழக்கமாக ஒரு அமைதி பேரணியுடன் முடித்துக்கொண்டார்கள். காலையில் எழுந்து செய்தித்தாள்களை பார்த்த கட்சிக்காரர்களும், திமுக அனுதாபிகளும் அதிர்ச்சியடைந்தார்கள் காரணம். திமுகவின் 50 ஆண்டுகால தலைவர், தற்போதைய முதல்வரின் தந்தை, நடப்பது அவர்கள் ஆட்சி, ஆனால் ஒரு முக்கிய பேப்பரில் கூட விளம்பரம் எதையும் காணோம். அஞ்சலி விளம்பரத்தால் ஒவ்வொரு பேப்பரும் கனத்திருக்கும் என்று பார்த்தவர்கள் மனதுதான் கனத்து போனது.
திமுக சார்பில் முழுப்பாக்கம் விளம்பரம் இருக்கும் என்று பார்த்தால் அனைத்து பேப்பர்களிலும் குடியரசுத்தலைவரை வரவேற்று புதுவை அரசு கொடுத்த விளம்பரமும், சில கம்பெனிகளின் முழுப்பக்க விளம்பரத்தையும் காண முடிந்தது. முரசொலி பிள்ளைத்தாச்சி போல் விளம்பரத்தால் வயிற்றைத்தள்ளிக்கொண்டு நிற்கும் என்று பார்த்தால், வறிய விவசாயியின் வயிறுபோல் ஒட்டிக்கொடு வழக்கமான பக்கங்களிலேயே வந்தது. தனது மனைவி இறந்த நாளின் 13 வது ஆண்டு நினைவு நாளில் ஒரு கணவர் கொடுத்த விளம்பரம் கூட சில பத்திரிக்கைகளில் காண் முடிந்தது. ஆனால் ஒரு அமைச்சர்களோ, மாவட்ட செயலாளர்களோ, கட்சி நிர்வாகிகளோ, துணை அமைப்புகளோ, எம்.எல்.ஏ, எம்பிக்களோ ஒருவர் கூட அஞ்சலி விளம்பரம் கொடுக்கவில்லை.
எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ பரந்தாமன் மட்டும் முரசொலியில் அஞ்சலி விளம்பரம் கொடுத்துள்ளார். கலைஞரை தாத்தா, பெரியப்பான்னு சொல்லும் வக்கீல் பிரசன்னா கூட ஆளைக்காணோம். அவ்வளவுதானா கருணாநிதியின் மரியாதை ?நடப்பது திமுக ஆட்சியா அதிமுக ஆட்சியா ? எடப்பாடி முதல்வரா? ஸ்டாலின் முதல்வரா? துணை அமைப்புகளான இளைஞரணி, மாணவர் அணி, மகளிர் அணி என விளம்பரம் கொடுத்திருந்தாலே செய்தித்தாள்கள் நிரம்பி வழிந்திருக்குமே!டிஐபிஆருக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி இருக்கிறார். உதயசந்திரன் பிறந்த நாளை ஞாபகம் வைத்திருக்கும் அளவுக்குக்கூட கருணாநிதியின் நினைவு நாளை ஞாபகம் வைத்திருக்கவில்லை போல.
இவர்கள் தான் கருணாநிதியின் ஆட்சியை, கொள்கையை கொண்டுவரப்போகிறார்களா? ஐந்தே ஆண்டுகளில் கருணாநிதியை அமைதி ஊர்வலத்துடன் முழுக்குப்போட்டு மறந்துவிட்டார்கள். இத்தனைக்கும் முதல்வரின் தந்தை அவர் என வருத்தப்படுகிறார்கள் உண்மையான திமுக விசுவாசிகள். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் கூட இன்றளவும் 36 ஆண்டுகள் கடந்தும் எம்ஜிஆரை நினைவு கூர்கிறார்கள். திமுக கொள்கையைத்தான் விட்டு விட்டது, கலைஞரின் நடைமுறைகளை, அவரது ஆட்சி நடத்தும் பாங்கை விட்டுவிட்டார்கள் என்று பார்த்தால் கலைஞரையே விட்டுவிட்டது இப்போதுதான் தெரிகிறது.
அவரது நூற்றாண்டு விழாவில் வரும் நினைவுநாள் எத்தனை சிறப்பாக அனுசரிக்கப்பட்டிருக்க வேண்டும் ? ஓய்வறியா சூரியன் இன்று ஓய்வெடுத்தான் என்பதை கட்சியினரைக் கடந்து, மக்களும் அல்லவா இந்த நாளில் நினைத்திருக்க வேண்டும் ?
கலைஞர் கருணாநிதிக்கே இதுதான் நிலைமை. மற்றவர்களுக்கு !!!