கஸ்டடி எடுக்கப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை கேட்கும் கேள்விகளுக்கு தெரியாது, ஞாபகமில்லை, அவரைக் கேளுங்கள், இவருக்குத் தெரியும், என செந்தில்பாலாஜி மழுப்பி வருவதால் விசாரணை நடத்தும் விதத்தை மாற்றி, தீவிரம் காட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் கைது செல்லாது என உச்சநீதிமன்றம் வரை போராடியும், அந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. செந்தில் பாலாஜியின் கைது செல்லும், அமலாக்கத்துறைக்கு செந்தில் பாலாஜியை கைது செய்யும் அதிகாரம் உள்ளது என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவையும் தள்ளுபடி செய்தது. மேலும் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் அனுமதி கிடைத்த உடனேயே வேகமாக செயலலில் இறங்கிய அதிகாரிகள் கீழமை நீதிமன்றத்தை நாடி செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க மனுத்தாக்கல் செய்தனர். அதற்கு உடனடியாக அனுமதி கிடைத்த நிலையில், புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி உடனடியாக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இரவு முழுவதும் துருவித்துருவி விசாரிப்பார்கள் என ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் அதே எதிர்ப்பார்ப்புடன் சென்ற செந்தில் பாலாஜிக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. தூக்கம் வருது என்ற உடன் உடனடியாக அவரை தூங்க அமலாக்கத்தறை அதிகாரிகள் அனுமதித்தனர். ஏசி அறை, மெத்தை என நிம்மதியாக தூங்கி எழுந்து காலை உணவுக்கு பின் விசாரணைக்கு கூப்பிடுவார்கள் என்று எதிர்ப்பார்த்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்திருந்தது. மதியம் வரை விசாரணைக்கு அழைக்காததோடு மதிய உணவுக்கு சிக்கன் பிரியாணியும் கொடுத்து மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியை அமலாக்கத்துறையினர் கொடுத்தனர். சிக்கன் பிரியாணியை ரசித்து சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுத்தார் செந்தில் பாலாஜி. இந்நிலையில், மாலை அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தாங்கள் தயாரித்து வைத்த கேள்விகளை கேட்க தொடங்கினர். அந்த கேள்விகளுக்கு எல்லாம் செந்தில் பாலாஜி, தெரியாது ஞாபகமில்லை, என்று மழுப்பலாகவே பதில் அளித்தார். அதிகாரிகள் துருவித்துருவி கேட்ட போதிலும் அதே பதிலையே செந்தில் பாலாஜி தெரிவித்தார். இதையடுத்து செந்தில் பாலாஜியை இப்படி விசாரித்தால் தகவல் கிடைக்காது என்று எண்ணிய அதிகாரிகள் சோதனையின் போது கிடைத்த ஆவணங்களை வைத்து நேரடியாக விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது “செந்தில் பாலாஜி தன்னை சாமர்த்தியசாலி என்று நினைத்துக் கொண்டு மழுப்பலான பதிலை சொல்லி தப்பிக்கப்பார்க்கிறார். எங்களிடம் வலுவான ஆதாரங்கள் உள்ளன, அவற்றை வைத்து இனி நேரடியாக கேள்விகளை கேட்க உள்ளோம். தான் மிகவும் சாமர்த்தியசாலி என்று நினைத்துக் கொண்டு அமலாக்கத் துறை போன்ற ஒரு சக்தி வாய்ந்த துறையையே பகைத்துக் கொண்டுள்ளார் செந்தில் பாலாஜி. அதன் பின் விளைவுகள் என்ன என்பதை இனி உணர்வார்” எங்களுக்கு செந்தில் பாலாஜியை எப்படி கையாள வேண்டும் என்று தெரியும்” என அவர் முடித்து கொண்டார்.
செந்தில் பாலாஜி போல் பலரையும் விசாரணையில் சந்தித்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களுக்கு எப்படி செந்தில் பாலாஜியை கையாள தெரியும் என்று தெரிவித்து இருப்பது விசாரணை முறையில் பழைய முறை இருக்காது, வேறு முறையில் பதிலை பெற காத்திருக்கிறார்கள் என தெரிகிறது.
மேலும் செந்தில் பாலாஜிக்கு எதிராக வலுவான ஆதாரங்களை அமலாக்கத் துறை சேகரித்துள்ளதாகவும் தெரிகிறது. அவரிடம் நடத்தும் விசாரணையில் அவர் ஒத்துழைத்தாலும், ஒத்துழைக்காவிட்டாலும், குறைந்தது ஒரு வருடத்துக்கு அவர் சிறையிலிருந்து வெளியே வர முடியாது என தெரிகிறது. விசாரணைக்கு ஒத்துழைக்காததைக் காரணம் காட்டியே ஜாமீனுக்கு அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு தெரிவிக் உள்ளதாகவும் தெரிகிறது.