அமைச்சர் பொன்முடிக்கு புதுவித சிக்கல் எழுந்துள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடியை விடுவித்ததை எதிர்த்து உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை கையிலெடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இது போன்ற suo motu revision இது முதல் முறை எனலாம்.
அமைச்சர் பொன்முடி முன்னர் கருணாநிதி தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சிக்காலத்தில் பொன்முடி மீதும், அவரது மனைவி மீதும் வழக்கு தொடரப்பட்டது. 15 ஆண்டுகளாக நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுவித்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜூன் 28 ஆம் தேதி உத்தரவிட்டது.
1996-2001 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது கடந்த 2006-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் வழக்கு கடந்த 2022- ஆம் ஆண்டு நவம்பரில் வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தாலும், உரிய சாட்சியங்கள், முகாந்திரம் இல்லாததாலும் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் ஆதாரங்கள் இருந்தும் அதை சரியாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தண்டனை வாங்கித்தர முயற்சிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அமைச்சர் மீதான சொத்துகுவிப்பு வழக்கை சரியாக கையாலவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை, பொன்முடி, அவரது மனைவிக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மதியம் 2-15 மணிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வருகிறது. உயர் நீதிமன்றம் suo motuவாக மேல்முறையீட்டை கையிலெடுத்து இருப்பதால் பொன்முடிக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
இதேபோல் அமைச்சர் பொன்முடி 1996 முதல் 2001 வரை அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் சைதாப்பேட்டையில் அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி இடத்தை, தனது மாமியார் சரஸ்வதி பெயரில் பதிவு செய்து 35 லட்சம் ரூபாய் செலவில் கட்டடம் கட்டினார் என புகார் எழுந்தது. 2003ல் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி பொன்முடி, சரஸ்வதி, சைதை கிட்டு உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கிலும் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அனைவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த எந்தவிதமான ஆவணங்களும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்யப்படவில்லை, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி கடந்த ஜூலை 6 அன்று அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் இதேபோல் சுஓமோட்டோ வழக்கு வர வாய்ப்புள்ளது என தெரிகிறது.
இதேபோல் 2003 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட அளவைத்தாண்டி செம்மண் அள்ளிய வழக்கும் எம்.எல்.ஏ-எம்.பிக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பை நோக்கி உள்ள நிலையில் இதே வழக்கில் கடந்த மாதம் அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குப்பதிந்து, வீடு மற்றும் அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தி பொன்முடி அவரது மகன் கவுதமசிகாமணி இருவரையும் அழைத்துச் சென்று விசாரித்தது.
ஒரு வழக்கு நிலுவையில் இருந்தால்தான் அமலாக்கத்துறை விசாரணை செய்ய முடியும் என்பதால், பல திமுக அமைச்சர்கள் தங்களுக்கு எதிரான வழக்கை விரைவாக முடித்து வருகின்றனர். தற்போது உயர்நீதிமன்றமே தானாக முன்வந்து மேல்முறையீட்டை கையில் எடுத்திருப்பது வழக்கை எதிர்கொண்டு வரும் திமுக பிரமுகர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று இவ்வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை பொன்முடி விடுதலையை எதிர்த்து ஏன் மேல்முறையீடு செய்யவில்லை என்ற கேள்வியும் உயர்நீதிமன்றத்தால் எழுப்பப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.