தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டால் கட்சிக்கு அது பேரழிவாக இருக்கும் என அக்கட்சி உறுப்பினர்களில் சிலர் காங்கிரஸ் தலைமைக்கு எழுதிய கடிதம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சட்டமன்ற கட்சி தலைவராக இருக்கும் செல்வபெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படலாம் என்ற செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் தான் இந்த புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் செல்வபெருந்தகை கட்சிக்கு துரோகம் இழைத்ததுடன் விடுதலை புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
செல்வப்பெருந்தகை 5 கட்சிகளுக்கு மாறியவர், முதலில் புரட்சி பாரதம், புரட்சி தமிழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, சமாஜ்வாடி கட்சி என்று பயணித்த பின்னர் இறுதியாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்தான் செல்வப் பெருந்தகை.
2008-ம் ஆம் ஆண்டு ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனை வழங்க காங்கிஸ் வலியுறுத்த வந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்த செல்வபெருந்தகை, ரவுடிகளை ஏவி விட்டு தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை சூறையாடியதுடன் , அங்கிருந்த 2 நபர்களையும் தாக்குதலுக்கு உட்படுத்தினார்.
ஜனவரி 29 அன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் விடுதலை புலிகளுக்கு ஆதவாக ராஜீவ் கொலையை நியாயப்படுத்தியும் செல்வபெருந்தகை பேசினார்.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் எம்.எல்.ஏ. வாக செல்வப்பெருந்கை ஆகியிருப்பது பெரும் துயரம். காங்கிரஸ் கட்சியின் கொள்கையற்ற நிர்வாகிகளை தன் பக்கம் சேர்த்து கொண்டு உள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிராமண பத்திரத்திலும் கூட 2 சிபிஐ வழக்குகள் உள்பட 8 குற்றவழக்குகள் தன் மேல் உள்ளதை அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்ட்டு வேலூர் சிறையிலும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூலிப்படை போல் செல்வப்பெருந்தகை நடந்து கொண்டதை காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் விரும்பவில்லை. பொதுமக்களை மிரட்டுவதையும் அவர் வழக்கமாக கொண்டுவந்தார். 1996 ஏப்ரலில் நடந்த ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் செல்வபெருந்தகை. அந்தகாலக்கட்டத்தில், ஆடிட்டர் பாண்டியின் வீட்டில் இருந்து ரூ.70 கோடியை கொள்ளையடித்ததாகவும் அப்போது செல்வப்பெருந்தகை மீது குற்றம்சாட்டப்பட்டது.
மேலும், வெளிநாடுகளில் உள்ள விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் அளித்த பணத்தை கொண்டு விசிக–வில் இருந்து வெளியேறி, லண்டனில் பக்கிஹாம் என்ற பெயரில் கல்லூரி ஒன்றை நிறுவி, அந்த கல்லூரியின் இயக்குனராக தனது மனைவி உமையாள் செல்வத்தை இயக்குனராகவும் நியமித்து கொண்டார்.
இந்நிலையில் தான், கடந்த 2010-ம் ஆண்டில் காங்கிரஸ் இணைந்த செல்வப்பெருந்தகைக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட, வேட்பாளராக அறிவிக்கபட்டார், அந்த தேர்தலில் தோல்வியும் அடைந்தார். பிறகு 2016-ம் ஆண்டு தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி தழுவிய நிலையில் மீண்டும் 2021 – ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மொத்தம் உள்ள 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 2 பேர் மட்டுமே அவருக்கு ஆதரவாக இருந்தனர். நாடார் சமூகத்தை சேர்ந்த 6 எம்எல்ஏக்களின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு பட்டியலின சமூகத்துக்கு அதிகாரம் வழங்கும் அடிப்படையில் காங். சட்டமன்ற தலைவராக அப்போது செல்வப்பெருந்தகை தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இவரை தமிழ்நாடு காங். தலைவராக நியமித்தால் அது தமிழ்நாட்டின் காங். கட்சிக்கு பேரிழிவாகும், எனவே அவரை காங்கிரஸ் தலைவராக நியமிக்கும் முடிவை கைவிடவேண்டும் என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு இந்தப் புகார் அனுப்பப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி, காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பூசல்கள் உலகறிந்தது. இந்நிலையில், செல்வப் பெருந்தகையை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமிக்க உள்ளது கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள மல்லிகார்ஜுன கார்கேவின் ஆதரவு செல்வப் பெருந்தகைக்கு உள்ளதால், ராகுல் காந்தியின் சாய்ஸ்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராகுலுக்கும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரியின் பதவிக் காலம் ஜனவரி மாதமே முடிந்தும் கூட அழகிரிக்கு பதிலாக ஒரு தலைவரை நியமிக்க முடியாமல் 135 வருடப் பழமையான காங்கிரஸ் கட்சி திணறுவது வியப்பாக உள்ளது. இதனால்தான் கடந்த 8 மாத காலமாக அழகிரியே தலைவராக நீடித்து வருகிறார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்களான ஜோதிமணியும், கார்த்தி சிதம்பரமும் தாங்கள்தான் அடுத்த தலைவர் என்று டெல்லி பத்திரிக்கையாளர்களுக்கு கடந்த வாரம் விருந்தளித்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற சஸ்பென்ஸ் தொடர்ந்து நீடிக்கிறது.