எம்ஜிஆர், ரஜினிகாந்த், விஜயகாந்த், கமல்ஹாசன், சீமான் என அரசியலில் கால்பதித்த உச்ச நட்சத்திரங்களின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் கணித்து தனது அரசியல் பாதையை மிக நிதானமாக தெளிவாக வகுக்கும் வகையில் விஜய் செயல்பட்டு வருவது சமீபத்திய நடவடிக்கைகளில் தெரிகிறது. முதல் கட்டமாக ஆலோசனை கூட்டங்கள் நடத்திய நிலையில் அடுத்து தனக்கான உத்தியை உருவாக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
அதன் ஒரு கட்டமாக விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் அணி கூட்டத்தை சமீபத்தில் கூட்டிருந்தார். இதை அடுத்து தனது அணிக்கான அடுத்தடுத்த கூட்டங்களை புஸ்ஸி ஆனந்த் மூலம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று ஐ.டி.விங்கின் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சமூக வலைதளங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பல்வேறு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த எக்ஸ்க்ளூசிவ் தகவல் சவுக்கு மீடியாவுக்கு கிடைத்துள்ளது அதை வாசகர்களுக்கு பகிர்கிறோம்.
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க தகவல் தொழில் நுட்ப அணியினருக்கு விஜய் மக்க இயக்க தலை கொடுத்த வழிகாட்டுதல் விவரம் வருமாறு:
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க தகவல் தொழில்நுட்ப அணி செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது. ரசிகர் மன்றமாக 24 ஆண்டுகளுக்கு முன்பு பயணத்தை துவங்கிய நாம் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மக்கள் இயக்கமாக செயல்படுகிறோம். இனிவரும் காலங்களில் வேறு பரிணாமங்களுடன் பயணிக்க தேவையான முன்னெடுப்புகளை செயல்படுத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக நம் இயக்கத்தில் பல்வேறு அணி கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறோம்.
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, எல்லை இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. நாள்தோறும் புது புது தொழில்நுட்பங்கள் அறிமுகமாவதால் அதனை உற்று கவனிக்கும் இளைய தலைமுறையினர் அதில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஏர்கலப்பை பிடிக்கும் விவசாயி முதல் ஏவுகணை செலுத்தும் விஞ்ஞானி வரை ஆண்ட்ராய்டு செல்போனை பயன்படுத்தும் காலத்தில் நாம் உள்ளோம். தகவல் தொழில்நுட்பங்களின் மூலமாக மக்களிடையே சமூக ஊடகங்கள் மிகவும் செல்வாக்கு மிக்க ஊடகங்களாக மாறிவிட்டன. தினமும் சுமார் குறைந்தது 2 முதல் 3 மணி நேரத்தை சமூக ஊடகங்களில் இந்திய மக்கள் செலவிடுகின்றனர் என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்திருக்கிறது.
பொதுமக்களிடையே அச்சு ஊடகம் காட்சி ஊடகங்களுக்கு இணையான தாக்கத்தை சமூக ஊடகங்கள் செய்து வருகின்றன. Whatsapp, YouTube சேனல்ஸ் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், சிக்னல், ஐஎம்ஓ போன்றவை முக்கிய பங்கு வைக்கின்றன. இளைஞர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக வலைதளங்களின் தரவரிசையில் இன்ஸ்டாகிராம் பேஸ்புக் முக்கிய இடங்களை பிடித்துள்ளது.
சமூக ஊடகங்களில் தாக்கத்தை வடிவமைப்பதில் செல்போன் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மிகவும் முக்கியமானது. எங்கும் எந்த நேரத்திலும் எந்த சாதனத்திலும் இணைக்கும் வழிமுறையை அனைவரின் கைகளிலும் வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சமூக ஊடகங்களால் ஒரு புரட்சி ஏற்பட்டது என்றால் அது ஜல்லிக்கட்டுக்காக நடந்த மெரினா புரட்சியை எடுத்துக்காட்டாக கூறலாம். சமூக ஊடகங்களின் செல்வாக்கு அரசியல், வணிகம், கல்வி, தொழில் உள்ளிட்டவற்றை வடிவமைப்பின் வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. மற்ற ஊடகங்களுடன் ஒப்பிடுகையில் அரசியல் பிரச்சாரங்களில் சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. சமூக ஊடகங்கள் மக்கள் மிகவும் சுதந்திரமாக தொடர்பு கொள்ள அனுமதிப்பதால் பல்வேறு சமூக பிரச்சனைகளும் தனிநபர் பிரச்சினைகளும் வெளியே வருகின்றன.
அரசியல் தளத்தில் சமூக ஊடகங்கள் மூலம் நடக்கும் பிரச்சாரங்கள் மக்களிடையே எளிதில் செல்வதால் சமூக ஊடக அணிகளை அனைத்து அமைப்புகளும் கட்டமைத்து வழிகாட்டுதலுடன் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன.
1.விஜய் மக்கள் இயக்க தகவல் தொழில்நுட்ப அணியின் பணிகள் தமிழ்நாட்டு மக்களுக்கும் இயக்கத்துக்குமான தொடர்பை தொடர்ந்து வலுப்படுத்தவே சமூக ஊடகங்களை தகவல் தொழில் நுட்ப அணி பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியமான கடமையாகும்.
2. இயக்கத்தின் தலைமை உத்தரவு, இயக்கத்தின் புதிய அறிவிப்புகள், இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் தெரிவித்தவுடன் அதனை உரிய ஹேஷ் டேக்குடன் பதிவிட வேண்டும்.
3. அணியின் தலைமை தெரிவிக்கும் பதிவுகளை மாநகரம் முதல் ஊராட்சி கிளை வரை உள்ள whatsapp குழுக்களுக்கு பகிர வேண்டும். அதில் இடைச்செருகலாக தங்களது படங்கள், பெயர் விவரங்களை சேர்க்கக்கூடாது.
4. முக்கிய திருவிழாக்கள் தலைவர்களின் பிறந்த நாட்களில், நினைவு நாட்களில் தலைமை உருவாக்கிய போஸ்டர்களையே பகிர வேண்டும். சில பதிவுகளுக்கு கீழே மாவட்டம், தொகுதி, ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி தலைமை ஒப்புதலுடன் சேர்க்கலாம்.
5. இயக்கத்தின் தலைமை ஒரு பதிவை FaceBook, Instagram, Twitter போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டால் அணியில் இருப்பவர்கள் அனைவரும் லைக் மற்றும் ஷேர் செய்ய வேண்டும். லைக்ஸ் அண்ட் ஷேரிங் எண்ணிக்கை மில்லியனை சாதாரணமாக தாண்ட வேண்டும்.
6.இயக்கத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடுவதற்காக இருக்கும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரிலான Twitter தளம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் சேனல் போன்ற சமூக ஊடகங்களின் ஃபாலோவர்ஸ், சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கை மில்லியன்ஸ் கணக்கில் உயர அணி முழுமையாக முயற்சிக்க வேண்டும். அதில் வெளியாகும் வீடியோக்களை மற்ற சமூக ஊடகங்களில் பகிர வேண்டும்.
7. தலைமை எந்த மாதிரியான படங்கள் வீடியோக்களை பயன்படுத்த சொல்கிறதோ அதனை அப்படியே பின்பற்ற வேண்டும்.
8. அணியின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் தங்களது கணக்கிலிருந்து யாரை பின்பற்ற வேண்டும் என்று வகுக்கப்பட்ட நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
9. இயக்கத்திற்குள் தற்போது சுமார் 1600-க்கும் மேற்பட்ட whatsapp குழுக்களும் அதில் சுமார் மூன்று லட்சம் பேர் இயக்கப் பணிகள் சார்ந்த தகவல் பரிமாற்றம் செய்து வருகின்றனர். இவை அனைத்தையும் மறுக்கட்டமைப்பும் மூலம் சீரமைத்து விரிவாக்கம் செய்து 234 தொகுதிகளிலும் வலுப்படுத்த வேண்டும்.
10. இயக்கத்தின் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, வழக்கறிஞர் அணி, தொழிலாளர் அணி, வணிகர் அணி, விவசாயிகள் அணி உள்ளிட்ட அனைத்து அணிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களையும் இணைக்கும் பாலமாக தகவல் தொழில்நுட்ப அணி செயல்பட வேண்டும். இதனை நிர்வாகிக்க மாநகரம் மாவட்டம் ஒன்றியம் நகரம் வட்டம் பகுதி பேரூர் ஊராட்சி கிளை ஆகிய அனைத்து பகுதிகளுக்கும் செயலாளர்கள் இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் 30,000 பேரை 234 தொகுதிகளின் நிர்வாகிகளாக நியமிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
11. எந்த பதில்களும் கருத்தியலாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் தரம் தாழ்ந்தோ, ஆபாச வார்த்தைகளோ, வன்முறையை தூண்டும் வகையிலோ பதிவுகளும், பதில்களும் இருக்கக்கூடாது.
12. இயக்கத்தின் தலைமை மீதும் இயக்க செயல்பாடுகள் மீதும் விமர்சனம் வரும்போதெல்லாம் இயக்கத்தின் கொள்கை பரப்பு செயலாளர்கள், செய்தி தொடர்பாளர் வழியாக பதிலடி கொடுக்க வேண்டும்.
13. சமூக ஊடகங்களில் ரீல்ஸ் அண்ட் ஷார்ட்ஸ் வைரலாகி வருவதால் அதற்கு ஏற்ப சிறிய வீடியோ தொகுப்புகள் வெளியிடுவது அவசியமானது.
14. இயக்கம் இதுவரை செய்த பணிகள், சேவைகளையும் தற்போது செய்து வரும் சேவைகளையும் தொடர்ந்து வீடியோவாக பதிவிட வேண்டும். அந்த வீடியோவில் எப்போது எந்த பகுதியில் எடுக்கப்பட்டது என்ற விவரங்களை இணைக்க வேண்டும்.
15. குருதியாகம், விழியகம், விருந்தகம், பயிலகம் உள்ளிட்ட இயக்கத்தின் சேவைகள் மூலம் பயனடைந்த பயனாளிகளின் பேட்டிகளை அவர்களின் ஒப்புதல் பெற்று சின்னஞ்சிறிய வீடியோவாக வெளியிடுவது முக்கியமானது.
16. இயக்கத்தின் தலைமையின் கீழ் இயங்கும் ஒவ்வொரு அணிகளின் செயல்பாடுகளையும் கால அட்டவணை தயாரித்து அதற்கேற்ப தொடர்ந்து பகிர வேண்டும்.
17. தலைமையின் ஒப்புதல் இல்லாமல் மற்றவர்களின் பதிவுகளை லைக் செய்யவும், ஷேர் செய்யவும் கூடாது. எந்த வகையிலும் தனிநபர் தாக்குதல் இருக்கக் கூடாது. மொழி, இனம், சாதி, மதம் என்ற வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ளாமல் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் நல்லிணக்க பாதையில் பயணிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
18. சமூக ஊடகங்களில் அரசியல், சமூக தலைவர்கள், அரசுகளை வழிநடத்தும் தலைவர்கள், திரைத்துறை சார்ந்த கலைஞர்கள் குறித்து கருத்து பரிமாற்றம் மற்றும் தர்க்கங்கள் நாகரீகத்துடன், ஆதாரங்கள் அடிப்படையிலும் கருத்துகளாகவும், கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்தியும் இருக்க வேண்டும்.
19. இயக்கத்தின் தரப்பில் இருந்து கொடுக்கப்படும் விமர்சனங்களும், பதிலடிகளும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டும், நாகரீகமான வார்த்தைகளை மட்டுமே கொண்டிருக்கவேண்டும். தரம் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. வெரிஃபைடு (verified) அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் யாருடைய விமர்சனங்களுக்கும் கமெண்ட் பகுதியில் சென்று பதில் தெரிவிக்க கூடாது.
20. அனைத்து சமூக ஊடகங்களுக்கும் சில நெறிமுறைகள் கட்டுப்பாடுகள் உள்ளன இவை காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டு புதிய விதிமுறைகளை அறிவிக்கின்றன. அதனை முறையாக அறிந்து அதற்கு ஏற்ப செயல்படுதல் மட்டுமின்றி அணியில் உள்ளவர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். அணியில் இருப்பவர்களும் அப்டேட் ஆக இருக்க வேண்டும்.
இவ்வாறு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. தனது அணி எவ்வாறு, எந்த பாதையில் செல்ல வேண்டும், எந்தெந்த வகையில் நாகரிகத்துடன் நடந்து கொள்ள வேண்டும், அரசியல் ரீதியாக எவ்வாறு பதில் அளிக்க வேண்டும், தலைமைக்கு எவ்வாறு கட்டுப்பட வேண்டும் சமூக வலைதளங்களில் எவ்வாறு இயங்க வேண்டும் என பல்வேறு வழிகாட்டுதல்களை விஜய் மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ளது.
இதை வலியுறுத்தி சமூக வலைத்தள நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த 20 வழிகாட்டுதல்களில் முக்கியமாக அவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொல்வது நாகரிகத்துடன், கண்ணியத்துடன் பதில்கள் இருக்க வேண்டும். எதையும் ஆதாரப்பூர்வமாக, நிதானமான, ஒரு அரசியல் பார்வை உடன் வாதங்களை வைக்க வேண்டும். முக்கியமான தலைவர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் குறித்து பதிவிடும் பொழுது வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தியுள்ளது தற்போது சில அரசியல் கட்சிகள் ஐடி வெங் என்கிற பெயரில் தரம் தாழ்ந்து விமர்சித்து மக்கள் மத்தியில் கட்சிக்கு கெட்டப்பெயர் வாங்கித்தருவதை கணித்து அறிவுறுத்தலாக வைத்துள்ளது தெரிகிறது.
அதைவிட முக்கியமானது தங்களுடைய சமூகவலைதளங்களில் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும், பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும், அதிகளவு இளைஞர்களிடையே சமூக வலைத்தளத்தை கொண்டு செல்ல வேண்டும், அதன் மூலம் விஜய் மக்கள் இயக்கத்தை அதிகமான அளவில் அதனுடைய கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டும் என முடிவெடுப்பது அவர்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
இந்த முதல் படி வித்தியாசமானதாகவும் புத்திசாலித்தனமாகவும் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் பார்வை உள்ளது. இதுவரை மற்ற அரசியல் இயக்கங்கள் தொடங்கிய நடிகர்கள் இது போன்ற வழிகாட்டுதல்களையோ அல்லது கூட்டங்களையோ நடத்தியதாக தகவல் இல்லை. ஆனால் விஜய் தன்னுடைய ஒவ்வொரு அடியையும் மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக எடுத்து வைக்கிறார் என்பதை இது போன்ற கூட்டங்கள் தெளிவு படுத்துகின்றன. இது அவருக்கு 2026 க்கான தெளிவான பாதையையை வகுத்து கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.