”அண்ணே வணக்கம்” என்றபடி வந்து அமர்ந்தனர் கமால்பாய், போஸ்பாண்டி, குமார்ஜி மூவரும். ”வாங்கப்பா லகுட பாண்டிகளா”என்று சிரித்தப்படி வரவேற்றார் கோபால். ”அண்ணே என்னண்ணே ரொம்ப பிசியா இருக்கீங்க சந்திக்கவே முடியல” என்றபடி வந்து அமர்ந்தனர் மூவரும்.
”ஆமாம்பா அரசியல்ல என்னென்னமோ வேக வேகமா நடக்குதே அதற்கு ஏற்றாற்போல வேகமா நாமும் போகணும் அல்லவா அதான் அடிக்கடி சந்திக்க முடியல” என்று சொன்ன கோபால் ”என்ன ஏதாவது புதுசா இருக்கா”ன்னு கேட்க ”ஆமாண்ணே இப்ப நடக்கிறது எல்லாமே புதுசா இருக்கு திடீர்னு பழைய வழக்கை தூசி தட்டி நீதி மன்றம் எடுக்குது என்னதான் நடக்குதுண்ணே” என்று போஸ்பாண்டி கேட்க ”அதுதான் இப்ப உங்க தலைவர்கள் மூளைக்குள்ளும் ஓடுது அதனாலதான் குழப்பத்தில் என்ன செய்றதுன்னு தெரியாம முழிச்சிகிட்டிருப்பதை பார்க்க முடியுது”ன்னு சொன்ன கோபால், ”உயர் நீதிமன்றம் ஏதோ தன்னிச்சையா இயங்குவதாக இவர்கள் நினைக்கிறார்கள் ஆனால் இந்த நடவடிக்கை எல்லாம் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் இல்லாமல் நடப்பதில்லைன்னு இவர்களுக்கு தெரியவில்லை.
கீழமை நீதிமன்றங்கள் எனக்கென்னன்னு அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட வழக்கை ரத்து செய்ததும் அமைச்சர்கள் ஹாயாக வழக்கில் விடுவிக்கப்பட்டதும் சட்டத்தைப்பற்றிய மக்கள் மனதில் என்ன எண்ணம் தோன்றும் என்ற நினைப்புதான் நீதிபதி வெங்கடேஷை வழக்குகளை தூசி தட்ட வைத்தது. இது திமுக தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி விவகாரத்தில் கற்ற பாடத்தை வைத்து தங்கள் மீதுள்ள வழக்குகளை எப்படியாவது சீக்கிரம் முடித்து வழக்கை நீதிமன்றத்தில் ரத்து செய்யவைக்க வேண்டும் என முடிவெடுத்து செயல்பட்டனர்.
உயர் நீதிமன்றத்தில் இதற்காக செயல்படும் நீதிபதியின் கவனத்திற்கு வர, வழக்குகள் நடத்தப்பட்ட விதம் தமிழக அரசு அதிகாரிகள், போலீஸார் ஒத்து ஊதியது அனைத்தையும் கண்டுபிடித்தவர் முதலில் பொன்முடி வழக்கை சூ மோட்டோ (தானாக முன்வந்து) எடுத்தவர் அடுத்தடுத்த வழக்குகளை ஆராய்ந்தபோது தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் வழக்குகளும் இதுபோல் முடிக்கப்பட்ட்தைக்கண்டு கொதித்துப்போயுள்ளார். அடுத்து அந்த வழக்குகளையும் தாமாக முன்வந்து எடுக்க திமுக தலைமை அரண்டு போய்விட்டது.
விட்டால் அடுத்தடுத்து பல அமைச்சர்கள் வழக்குகளும் இதேபோல் சுஓ மோட்டோ எடுக்கப்படும். அதுவுமில்லாமல் அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தப்பிக்க வழக்கை எப்பாடு பட்டாவது முடிக்கும் அவசரத்தில் இருந்த அமைச்சர்களுக்கு இது இப்போது பெரிய சிக்கலாக மாற என்ன செய்வது என்று புரியாமல் அறிவாலய ஏட்டய்யா ஆர்.எஸ்.பாரதியை விட்டு பேட்டி கொடுக்க வைத்த்து திமுக தலைமை”. என்றார் கோபால்.
”அமைச்சர்கள் இஷ்டத்துக்கு நீதிமன்றத்தை வளைத்து வழக்கை ஒன்றுமில்லாமல் செய்ய முடியுமா?” என்று அப்பாவியாக கேட்டார் கமால்பாய். ”நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள் பாய், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதை தனது வழக்கில் இதையும் குறிப்பிடுகிறாரே” என்றார் குமார்ஜி. ”இப்ப மேட்டருக்கு வருவோம் அறிவாலய ஏட்டய்யா ஆர்.எஸ்.பாரதி பேட்டி கொடுக்கிறேன் என்கிற போர்வையில் மறைமுகமாக நீதிபதியை அதிமுக ஆட்சியில் நீதிபதிகள் நடத்தப்பட்டதை குறிப்பிட்டு மிரட்டும் தொனியில் பேசினார். பின்னர் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பெயரை குறிப்பிட்டு தன்மீது அவர் வழக்குப்பதிவு செய்து உச்ச நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்த்தையும் சொன்னார். இதெல்லாம் நீதிமன்ற அவமதிப்பு என்பது தெரிந்தும் எதை தின்றால் பித்தம் தெளியும் என்கிற நிலையில் இருக்கும் திமுக தலைவர்களால் இப்படித்தானே பேச முடியும்.
ஆர்.எஸ் பாரதியின் இந்த பேட்டியும், தலைமை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எடுத்த முடிவே. திமுகவில் ஒருவர், நீதிபதியை திட்டி பேட்டி கொடுத்தால் பயந்து விடுவார் என்று ஐடியா கொடுக்க, அதன் விளைவே ஆர். எஸ் பாரதி.
அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கொண்டுச் சென்றபோது ஆனந்த வெங்கடேஷ், தான் அவமதிப்பு வழக்கை எடுக்க போவதில்லை என மறுத்துவிட்டார். ஆனாலும் அவமதிப்பு வழக்கு ஆர்.எஸ்.பாரதி மீது வரத்தான் போகுது அதற்கும் சேர்த்து திமுக அரசு குட்டுப்படத்தான் போகுது” என்றார் கோபால். ”வேறு எதில் குட்டுப்பட்டார்கள்” என்று கேட்டார் போஸ் பாண்டி. ”ஏன் உனக்கு தெரியாதா பாண்டி சமீப வாரத்தில் ஒரு வழக்கில் ஆட்சியருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் மற்றொரு வழக்கில் துறை செயலர் பதிலளிக்காமல் சம்பந்தமில்லாத அதிகாரி பதிலளித்ததால் கோபமடைந்த நீதிமன்றம் குட்டு வைத்தது. அது மட்டுமல்ல உச்சநீதிமன்றத்திலும் செந்தில் பாலாஜி வழக்கில் வாங்கிக்கட்டிக்கொண்டு வந்தார்கள். அதனால் நீதிமன்றங்களில் குட்டுப்படுவது தமிழக அரசுக்கும் பழகிபோய்விட்டது” என்று கிண்டலடித்தார் குமார்ஜி.
”ஏண்ணே இதெல்லாம் முதல்வர் பார்வைக்கு போகாதா? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அடவடிக்கை எடுக்க மாட்டாரா?” என்று கேட்டார் கமால் பாய், ”பாய் இன்று உனக்கு என்னமோ ஆகிவிட்டது. லண்டன் அமெரிக்காவில் இருந்து வந்தது போல் கேள்வி கேட்கிறாய். முதல்வர் எதற்குத்தான் ரியாக்ஷன் கொடுத்திருக்கார்” என்று கோபத்துடன் சொன்னார் குமார்ஜி. ”அடுத்த கோர்ட் மேட்டருக்கு வருவோம் செந்தில் பாலாஜி வழக்கில் என்ன திடீர்னு 3 நாள் மட்டும் ரிமாண்ட் நீட்டிக்கப்பட்டுள்ளது, அதற்கு பிறகு விடுவித்து விடுவார்களா என்று கேட்டார் போஸ் பாண்டி”. ”உங்கள் ஆட்கள் மாதிரியே இவ்வளவு விவரம் தெரியாத ஆளா இருக்கிறாயே, உங்கள் சட்ட நிபுணர்கள் செய்த காரியத்தால் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கூட இதுவரை கேட்கவில்லை, இதில் வெளியே விட்ருவாங்கன்னு நப்பாசை வேற, என்ன நடந்துச்சுன்னு சொல்றேன் கேட்டுக்க” என்று சொல்ல ஆரம்பித்தார் கோபால்.
”அரசு செந்தில் பாலாஜியை சிறையில் வைத்தே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தலாம் என்று வீடியோ கான்ஃபரன்ஸ் எல்லாம் ஏற்பாடு செய்து ஜம்முன்னு வைத்திருந்தார்கள். சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு, வழக்கு விசாரணை ஆக.28 என்பதால் நீதிபதி 3 நாள் மட்டும் ரிமாண்டை நீட்டித்து திங்கட்கிழமை (ஆகஸ்டு 28) நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுட்டார். அதனால் நேரில் வெளியே நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு கூண்டில் நிறுத்தப்படுகிறார் செந்தில் பாலாஜி” என்று சிரித்தார் கோபால்.
”அப்ப இனி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விரைவாக நடக்கும் அப்படித்தானே” என்று கேட்டார் கமால் பாய், ”ஆமாம் அதில் என்ன சந்தேகம்” என்ற கோபால், ”இதில் ஒரு காமெடி என்னவென்றால் ஒரு நாள் கூட சிறையில் இருக்க கூடாது என்று துடித்த செந்தில் பாலாஜி தரப்பும், அரசும், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயன்று நடக்காமல் போக பின்னர் அவர்களே குழம்பிபோய் எப்போது ஜாமீன் போடுவது என்ற குழப்பத்தில் இருந்து, ஒரு வழியாக செந்தில் பாலாஜி ஆஜர்ப்படுத்தப்பட்ட அன்று ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்தார்கள்.
சிறப்பு நீதிபதியோ, நீங்கள் அமர்வு நீதிமன்றத்திலேயே ஜாமீன் தாக்கல் செய்யுங்கள் என்று சொன்னதும், செவ்வாய்க்கிழமை அன்று முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
60 நாளில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாது நாம அதை வைத்தே ஜாமீன் வாங்கிடலாம்னு நினைச்சவங்க எண்ணத்தில் ஒரு லாரி மண்ணை அள்ளிப்போட்டு பெரிய டிரங்க் பெட்டியில் ஆவணங்களுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ஆடிப்போய்விட்டார்களாம். அந்த குற்றப்பத்திரிக்கையின் முக்கிய ஆவணங்களே மத்திய குற்றப்பிரிவு போலீஸார் எடுத்தவைதான், ஆனால் சென்னை போலீஸார் அதை கிடப்பில் போட அமலாக்கத்துறை அதை வைத்தே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாம்.
செந்தில் பாலாஜி பற்றி இப்போது திமுகவில் யாருமே பேசுவதில்லை. கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில் அவர் இருக்கிறார் என்றுத்தான் சொல்லவேண்டும். அது மட்டுமல்ல உச்ச நீதிமன்றமும் சென்னை போலீஸ் விசாரணையில் அதிருப்தியாகி உள்ளனர், செப்டம்பர் 30-ல் வரும் விசாரணையில் குற்றப்பத்திரிக்கை மேட்டரால் கடுப்பாகும் உச்ச நீதிமன்றம் கண்டிப்பாக சிறப்பு விசாரணை குழுவை அமைக்கும் அதில் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் இருக்கலாம் என்கிறனர். செந்தில் பாலாஜிக்கு செக் மேட் தான்” என்று முடித்தார் கோபால்.
“நான் ஒரு கூடுதல் தகவல் சொல்றேன்” என்று உள்ளே நுழைந்த போஸ் பாண்டி, “தனக்கு பெரும் போட்டியாக திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் கருதும் என்.ஆர் இளங்கோவை விட நான் சிறந்தவன் என்று நிரூபிக்கிறேன் என்று, முதல்வரிடம் சென்று, “என். ஆர். இளங்கோவுக்கு வழக்கு நடத்த தெரியவில்லை. நானாக இருந்தால், அமலாக்கத் துறை நடத்திய சோதனையே தப்பு என்று வாதிட்டிருப்பேன். நீங்கள் இதை செந்தில் பாலாஜியிடம் சொல்லுங்கள் என்று கூற, முதல்வரோ, நமது கட்சி வழக்கு வேறு. செந்தில் பாலாஜியின் தனிப்பட்ட வழக்கு இது. அவருக்கு விருப்பமான வழக்கறிஞரை வைத்துக் கொள்ள அவருக்கு உரிமை உண்டு. நாம் இதில் தலையிட முடியாது” என்று கறாராக கூறியிருக்கிறார்.
”அண்ணே இதில் சென்னை போக்குவரத்து கழக ஜாப் ராக்கெட் மட்டுமல்ல மற்ற தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து கழகங்களிலும் இவர்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர் பட்டியலை எடுத்து விசாரித்தால் பெரும் சிக்கல்தான் செந்தில் பாலாஜிக்கு என்கிறனர்” என்ற குமார்ஜி, ”இதில் அமைச்சர் வழக்குகளை எடுக்கும் ஜட்ஜ் ஆனந்த வெங்கடேஷின் ஓட்டுநர், உதவியாளர், குடும்ப உறுப்பினர்கள் மற்ற நெருக்கமானவர்கள் யார் யாரை சந்திக்கிறார்கள், எங்கே போகிறார்கள் என்றெல்லாம் ஷேடோ போட்டு கண்காணிக்கிறார்களாம், காமெடியா இல்ல இதை கேட்டால், தப்புக்கு மேல் தப்பு செய்து சிக்கிக்கொள்கிறார்கள்” என்று சிரித்தார்.
”அண்ணே நான் இன்னொரு மேட்டர் சொல்றேன்” என்று கேட்ட போஸ் பாண்டி “அண்ணாமலையின் பாதயாத்திரை பெரும் சொதப்பலாக ஆகி வருகிறதே அதைப்பற்றி பேசவே மாட்டேங்கிறீங்களே” என்று சொல்ல ”அதுதான் ஊரறிந்த கதையாச்சே, அண்ணாமலை ஆரம்பிக்கும்போது பெரிதாக ஆரம்பித்தார், அவரது வாகனத்தில் மோடி படம் இல்லை, மத்திய அரசின் சாதனைகளை பேசுவதில்லை, மாநில அரசை கண்டித்து பேசுவதில்லை, திமுக ஃபைல்ஸ், ஒன்று , இரண்டை வைத்து பெரிய அளவில் விளாசுவார் என்று எதிர்பார்த்தார்கள் எதுவும் நடக்கவில்லை. முக்கியமாக ஆளுநரை கடுமையாக திமுக விமர்சிக்கும்போது அண்ணாமலை அதற்கு லேட்டாக ரியாக்ட் செய்வது உள்ளிட்ட அனைத்தையும் டெல்லி மேலிடத்திற்கு ஃபைல் போட்டு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள் எதிர் தரப்பினர். அண்ணாமலை பாதயாத்திரை சக்சஸ் ஆகக்கூடாது என்பதில் திமுகவினரை விட பாஜகவில் ஒரு பெரிய டீமே வேலை செய்கிறதாம்.
அதேபோல் அண்ணாமல் பைசா பெறாத விஷயத்துக்கு எல்லாம் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தினார், ஆனால் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஒரு சின்ன போராட்டத்தைக்கூட நடத்தவில்லை, பாஸ்போர்ட் ஸ்கேம் விஷயத்திலும் டேவிட்சனுக்கு எதிராக ஒரு துரும்பையும் நகர்த்தவில்லை என்று டெல்லிக்கு புகார் போயிருக்காம். 2024 தேர்தலுக்கு பின் அண்ணாமலை விவகாரத்திலும் புதிய முடிவு இருக்கும் என்கிறார்கள். அண்ணாமலையும் அதற்கு ஏற்றாற்போல் ஆரம்பத்தில் பாதயாத்திரையில் காட்டிய அக்கறையை தற்போது காட்டவில்லை என்கிறார்கள்” என்று முடித்தார் கமால் பாய்.
”அண்ணாமலையை நம்பி மோசம் போனார் ஓபிஎஸ் என்று ஒருபக்கம் சொல்ல, திமுகவை நம்பி ஒன்றுமில்லாமல் போனார் என்று இன்னொரு பக்கம் சொல்கிறார்கள், என்ன ஆனாலும் அதிமுகவை செயல்படவிடாமல் தடுக்கும் முயற்சியில் இரண்டு பக்கத்திலும் ஓபிஎஸ் ரூட் எடுத்தார். ஆனால் எல்லாமே தோல்வியில் முடிந்தது”. என்றார் கோபால். ”இவ்வளவு தோல்விக்கு பிறகும் விடாமல் முயற்சி எடுக்கிறாரே ஓபிஎஸ் அதற்கு என்ன காரணம்ணே” என்று கேட்டார் குமார்ஜி.”அதற்கு பின்னால் பெரிய கதை இருக்கு குமாரு, அவரது முயற்சிக்கு பின்னால் மக்கள் எதுவும் இல்லை, அவர் பலவகைகளில் சேர்த்த பெரிய அமௌண்ட்டை சில பினாமிகளிடம் கொடுத்து வைத்துள்ளார். அது சுமார் 20 ஆயிரம் கோடிவரை இருக்கும் என்று சொல்கிறார்கள். அதை மீட்க வேண்டுமானால் அரசியலில் பவராக இருப்பதுபோல் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதால் மெனக்கிடுகிறார் என்று கூட இருக்கிறவர்களே பேசிக்கொள்கிறார்கள். அதற்காக தனி கட்சியே தொடங்கப்போவதாகவும் பேச்சு அடிபடுகிறது” என்றார் கோபால்.
”ஏண்ணே மருமகன் மேட்டருக்கு வாங்க புதுசா எதுவும் இருக்கா?” என்று கமால்பாய் கேட்க ”நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா” என்று பாடிவிட்டு ”இருக்கு சிறப்பா இருக்கு முன்னர் அவருடைய பென்(PEN) அமைப்பு சரிபட்டு வராதுன்னு மாமனாரே நிறுத்தச் சொன்னார், இந்த நிலையில் அந்த நிறுவனத்தில் உள்ள 25 பேரை தன் நிறுவனத்துக்கு இழுத்துக்கொண்டாராம் உதயநிதி, இதனால் பென்(PEN) அமைப்பு மொட்டிலேயே கருகத் தொடங்கி விட்டது. ஏற்கெனவே உளவுத்துறை ஏடிஜிபியாக இருந்த டேவீட்சன் ஆசிர்வாதம், ஐஜி ஆசியம்மாள் உதவியுடன் தமிழகத்தின் பல பத்தாண்டுகள் டேட்டாவை பெற்ற டீம், அவர்கள் இருவர் போனவுடன் சரியான தகவலும் கிடைக்காததால் ’பென்’ நிறுவனத்தை என்ன செய்வது என தெரியாமல் மருமகன் முழிக்கிறாராம். தற்போது திமுகவுக்கு அரசியல் வழிகாட்டல் டீம் இல்லை. ஆனால் திமுகவுக்கு ஒன்றுமே இல்லை .ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத மருமகன் தனது வேலையை காட்டி வருகிறார்.
இதனால் மகன், மருமகன் இருவருக்குமான முட்டல் மோதல் அதிகமாக நடந்து வருகிறது. மருமகன் மாமனார் வீட்டுக்கே வருவதில்லை. மாமனார் தான் மருமகன் வீட்டுக்கு போகிறார், அதுமட்டுமல்ல மகன் வீட்டுக்கும் அவ்வப்போது செல்கிறார் சி.எம். ஆனால் சில நாட்களுக்கு முன் இரண்டே இரண்டு கார் முன் பின் வர மகன் வீட்டுக்கு சி.எம் அவசர அவசரமாக வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் உதயநிதியின் பேச்சால் முதல்வரே அப்செட் ஆனதுதானாம். உண்ணாவிரதத்தில் ஆளுநரை தரம்தாழ்ந்து உதயநிதி விமர்சிக்க அதனால் திமுக தலைவர்கள் அதிர்ந்துபோய் முதல்வர் கவனத்துக்கு கொண்டுச் செல்ல உடனடியாக வீட்டுக்கு குடும்பத்துடன் போய்விட்டாராம்.
ஆளுநர் பற்றி பேசியது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் சி.எம். அரசியலில் நிதானம் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இதுகுறித்து உதயநிதியிடம் மூத்த அமைச்சர்கள் கேட்டபோது நான் மக்கள் செருப்பால் அடிப்பார்கள் என்றுத்தானே பேசினேன் என்று மழுப்பினாராம். ஆனால் ஆளுநர் தரப்பு அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. வரும் காலங்களில் அதற்கான விளைவு இருக்கும் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். இதற்காகத்தான் முதல்வர் பதறியிருக்கிறார் என்கின்றனர். இதுமட்டுமல்ல அடுத்தடுத்த மாதங்கள் திமுகவுக்கு நெருக்கடியான நாட்களாகத்தான் நகரும் என்கின்றனர் டெல்லி சோர்ஸ்கள்” என்றார் கோபால்.
”இருக்கிற பிரச்சினையில் அதிமுக மாநாடுக்கு கிடைத்த வரவேற்பு, அன்று நடந்த நீட் போராட்டம் பிசுபிசுத்து போனதால் திமுக தலைமை பெரும் அப்செட். இதில் அதிமுகவை முடக்க ஓபிஎஸ்–டிடிவியை வைத்து திமுக எடுத்த முயற்சிகளும் பலிக்கவில்லை என்பதால் கூடுதல் அப்செட். அதிமுக மாநாட்டுக்கு வந்த உண்மையான எண்ணிக்கையைச் சொன்னால் முதல்வர் மேலும் அப்செட் ஆகிவிடப்போகிறார் என்று பொய்யான கணக்கை உளவுத்துறை ரிப்போர்ட்டாக போட்டு தந்தார்களாம். வெறும் 3 லட்சம் பேர் 3000 வாகனங்கள் மட்டும் என ரிப்போர்ட் போட்டு மனம் குளிர வைத்தார்களாம்.
இதில் திமுக தலைமைக்கு, ’சக்திமான்’ உதயசந்திரன், ’தீரன்’ தினேஷ் உள்ளிட்ட அரசியல் மேதைகள் சில யோசனைகள் சொல்லியிருக்கின்றனர். அதிமுக மாநாட்டுக்கு போட்டியாக திமுகவும் பிரம்மாண்ட மாநாட்டை டிசம்பரில் நடத்திட வேண்டும் என யோசனை சொன்னார்களாம். உடனே முதல்வர் அப்படியானால் சின்னவருக்கு பேர் வருகிறமாதிரி அதை இளைஞர் அணி மாநாட்டாக நடத்தலாமே என்று சொல்ல அனைவரும் சேர்ந்து கோரசாக ஓ போட்டார்களாம்..கககபோ என்று கிண்டலாக சொன்ன குமார் ஜி என்னண்ணே கூட்டத்த முடிச்சுக்கலாமா?” என்று கேட்க
”இருப்பா கடைசியா இரண்டு மேட்டரை சொல்லிவிடுகிறேன், ஒன்னு முதல்வர் எதையும் கண்டுக்கொள்ளாததால் சக்திமான் உதயசந்திரன் ஆட்டம் மீண்டும் களைக்கட்ட தொடங்க ஊழலை ஒழிக்கும் பொறுப்பில் ஊழல் செய்து பேர் வாங்கிய அதிகாரியை நியமித்ததையும், மாநகராட்சி ஆணையரிடமே ஸ்டால் போட ஒரு கடைக்கு 2000 கட்டிங் வாங்கி கொடுக்கச் சொல்லி கேட்ட திமுக நிர்வாகியை மாநகராட்சி ஆணையர் கண்டிக்க அது வைரலாக 2 நாட்களாக முதல்வரோ துறை அமைச்சரோ அதுபற்றி கண்டுக்கொள்ளாமல் இருப்பதை பார்க்கும்போது வெளியில் வரும் விமர்சனங்கள் சரிதான் என்பதுபோல் இருக்கு சரி போகலாம்பா” என்று கோபால் கிளம்ப, அனைவரும் கலைந்து சென்றனர்.
பாசறை எக்ஸ்க்ளூசீவ்
1) தமிழகத்தில் புதிய நீரா ராடியா உருவாகியிருக்கிறார். “அ” என்ற எழுத்தில் தொடங்கும் அந்த அழகிய பெண்மணியின் கடைக்கண் பார்வை கிடைக்காதா என்று இளம் முதல் கிழம் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை தவமாய் தவமிருக்கிறார்கள். அந்த கடைக்கண் பார்வைக்காக அந்த பெண்மணி நடத்தும் நிறுவனத்துக்கு விளம்பரத்துக்கு மேல் ஆர்டர்களுக்கு மேல் ஆர்டர்களாக வந்து குவிகிறதாம். ‘மோகனமானவர்’ ஆர்டர்களைக் கொடுத்து, அழகியின் பார்வை தம் மீது விழவேண்டும் என்று ஒற்றைக் காலில் தவமிருக்கிறார்.
2) மதுரை மாநாட்டு வெற்றிக்கு பிறகு எப்படியாவது மீண்டும் செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டும் என்று நினைக்கும் தர்மயுத்த நாயகன், சாதி அரசியலை கையில் எடுக்க இருக்கிறார். அதன் ஒரு பகுதியாக, வரும் தேவர் குருபூஜைக்கு எடப்பாடி வருகை தந்தால், அவருக்கு கண்டனம் தெரிவிக்க சாதி சங்கங்களை தூண்டி விட திட்டமிட்டுள்ளார்.
3) மதுரை மாநாட்டுக்கு பிறகு, நிலைமை என்ன என்பதை உணர்ந்த ராஜமாதா அதிமுக பொதுச் செயலாளருக்கு தூது விட்டுள்ளார். நீங்கள் ஆட்சிக்கு வந்தபின், எங்கள் குடும்பத்துக்கு வர வேண்டிய, பல இடங்களில் மாட்டிக் கொண்டுள்ள பணத்தை மட்டும் வாங்கித் தாருங்கள். உங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன் என்று அவர் கொடுத்த offerஐ ‘புரட்சித் தமிழர்’ பரிசீலித்துக் கொண்டிருக்கிறாராம்.
4) பழனியாண்டவரின் பெயரைக் கொண்ட முதல்வரின் செயலாளருக்கும், சிவனின் பெயரைக் கொண்ட செயலாளருக்கும் வசூலில் மோதல் தொடங்கியுள்ளது. பழனியாண்டவர், முதல்வரின் அறியாமையை பயன்படுத்தி பல விவகாரங்களில் கோடிகளை குவித்து வருகிறார். அதில், சென்னை கிண்டியில் உள்ள மலைத் தொடர் பெயர் கொண்ட நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 ஏக்கர் நில விவகாரத்தில் 50 சி வரை பேரம் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாகவே, தலைமைச் செயலாளர் அந்தஸ்த்தில் உள்ள ஒரு அதிகாரிக்கு, இரண்டு நாட்களில் இரண்டு போஸ்டிங்குகள் போடப்பட்டுள்ளது.