சென்னை மாநகராட்சி துணை மேயர் மற்றும் அமைச்சர் பெரியகருப்பன் மருமகன் உள்ளிட்ட 5 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்துபோன பங்குதாரர் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதை அடுத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை மேற்கு தாம்பரம் ரெட்டி தெருவை சேர்ந்தவர் இசக்கியம்மாள்(42), இவரது கணவர் எஸ்.ஆர்.மோகன் கடந்த 2019 முதல் சிறுநீரக பிரச்சனையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவர் உயிரிழப்புக்கு பின் தனது மூன்றரை வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வரும் இசக்கியம்மாள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இந்த புகாரில் ,தனது கணவர் உயிருடன் இருந்த காலக்கட்டத்தில் தனது நண்பர்களான தற்போதைய சென்னை மாநகராட்சி துணை மேயராக பதவி வகிக்கும் மகேஷ்குமார் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் பெரியகருப்பனின் மருமகன் குணசேகரன் மற்றும் செல்வராஜ், பாலமுருகன், திவாகர் ஆகியோர் சேர்ந்து மார்ஸ் மைன்ஸ் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தனர்.
சைதாப்பேட்டையில் இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் மார்ஸ் மைன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரான தனது கணவர் மோகன் கடந்த 2021-ம் ஆண்டு நோய்வாய்பட்டு உயிரிழந்த பின் சக பங்குதாரக்களான மகேஷ்குமார், குணசேகரன், செல்வராஜ், பாலமுருகன், திவாகர் ஆகியோர் தனது கணவருக்குரிய பங்கை தனக்கும் தனது மகளுக்கும் சேரவிடாமல் தடுத்து மோசடி செய்தனர்.
எனது கணவருக்கும் மார்ஸ் மைன்ஸ் நிறுவனத்திற்கும் தொடர்பே இல்லாது போல் போலி ஆவணங்கள் தயாரித்து அதனை சட்டவிரோதமாக மாவட்ட பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக மனுவில் இசக்கியம்மாள் தெரிவித்துள்ளார்.
உடனே இது சம்மந்தமாக இசக்கியம்மாள் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று தென்சென்னை மாவட்ட பதிவாளர் சத்யபிரியாவிடம் விசாரித்த போது துணை மேயர் மகேஷ் உட்பட ஐந்து பேர் போலியான ஆவணங்களை சித்தரித்து அவரது பங்கை மோசடி செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி தனது கணவர் மோகன் இறந்த பின்பு அவர் உயிருடன் இருப்பது போன்றும் அவரது கையெழுத்தை போலியாக இவர்களே போட்டு என் கணவரை நிறுவனத்தில் இருந்து நீக்கியுள்ளனர். எனது கணவருக்கு சேர வேண்டிய பங்கை எனக்கும் என் மகளுக்கும் கொடுக்காமல் அபகரித்து மோசடியில் ஈடுபட்ட இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவரது புகார் மீது காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட இசக்கியம்மாள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இசக்கியம்மாள் புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை மத்திய
குற்றப்பிரிவு போலீசார் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார். கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பனின் மருமகன் குணசேகரன் மற்றும் செல்வராஜ், பாலமுருகன், திவாகர் ஆகிய ஐந்து பேர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.